சென்னை: சென்னை மாவட்டத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் பதிவு மாவட்ட சார் – பதிவகங்களின் எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணய வரைவானது, நேற்று முன்தினம் (ஆக. 19) நடைபெற்ற சென்னை மாவட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி துணைக்குழுகூட்டத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வைக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டது.
அதன்படி வட்டாட்சியர், சார்-பதிவாளர் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வரைவு வழிகாட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாட்களுக்குள் செயலாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), மதிப்பீட்டு துணைக்குழு, எண்-26, ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம், ராஜாஜி சாலை, சென்னை-600 001 என்ற முகவரியில் நேரிலோ தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-25356212 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.