சென்னை: சென்னை மாதவரத்தில் உள்ள ஃபின்சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பில், 80 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் நேற்று இலவசமாக வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கும் சக்கர நாற்காலிகள் (வீல் சேர்), குழந்தைகளுக்கான நடைபயிற்சி கருவிகள், வாக்கர்ஸ், டயாபர்ஸ், ஊன்றுகோல் உள்ளிட்டவற்றை ஃபின்சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வி.ஆர்.வம்சி வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சமூகத்தில் வறுமைக் கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்கள், சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.
குறிப்பாக, கரோனா தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்றோருக்கு ஆடைகள், பற்பசை, பிரஷ், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறோம். இவ்வாறு நலத்திட்ட உதவிகளுக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை செலவிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.