புதுடெல்லி: ‘பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ((Special Intensive Revision – SIR) நடவடிக்கைகு ஆதார் அட்டையை ஓர் அடையாள ஆவணமாக ஏற்காதது ஏன்?’ என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், ‘ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணமாக பரிசீலிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி, பிஹாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜோய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, கோபால் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் ஆஜராகினர். தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே. வேணுகோபால், ராகேஷ் திவேதி ஆஜராகினர்.
கபில் சிபல் தனது வாதத்தில், “ஒருவர் தான் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க 11 ஆவணங்களில் ஒன்றைக் காண்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், இதில் ஆதார் அடையாள அட்டை இல்லை. ஆனால், பாஸ்போர்ட் இருக்கிறது. பிஹார் மக்கள் தொகையில் 2% பேர் மட்டுமே பாஸ்போர்ட் வைத்துள்ளார்கள். ஆனால், 87% பேர் ஆதார் வைத்துள்ளார்கள். எனவே, ஆதாரை ஓர் ஆவணமாக தேர்தல் ஆணையம் சேர்க்க வேண்டும்” என வாதிட்டார்.
மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தனது வாதத்தில், “ஆதார் என்பது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் அடையாள ஆவணம். இதைப் பெறுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், முதல்முறையாக இந்த ஆவணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குடிமக்களைக் கண்டறிவதற்கான மறைமுகப் பயிற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது” என குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுதான்சு துலியா, “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி என்பது சிறப்புத் திருத்தமாகத் தெரியவில்லை. மாறாக, குடியுரிமையை கேள்விக்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பணியைப் போல தெரிகிறது” என குறிப்பிட்டார். “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தச் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஏன் மேற்கொள்ளப்படுகிறது?” என நீதிபதி ஜோய் மல்யா பாக்சி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியானது, உரிய நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும். அறிவிப்பு இல்லாமல், விசாரணைக்கான வாய்ப்பு இல்லாமல் யாருடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது” என உறுதி அளித்தார். மேலும் அவர், “அடையாள ஆவணங்களின் பட்டியலில் 11 ஆவணங்கள் உள்ளன. இது முழுமையானது அல்ல. அதேநேரத்தில், ஆதார் என்பது அடையாள அங்கீகார ஆவணம். குடியுரிமை ஆவணம் அல்ல.
வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் ஆவணங்கள் பதிவேற்றப்படும் நடைமுறையை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இதன்பிறகு, பெயர்களைச் சேர்ப்பது வழக்கமான நடைமுறையாகிவிடும். இந்த செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்காது. குடிமக்களாக இல்லாத, நாட்டில் வசிப்போருக்கும்கூட ஆதார் வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கான ஆவணம் என்று ஆதார் சட்டமும் கூறவில்லை. அதுமட்டுமல்ல, பிஹாரில் இருந்து 70 லட்சம் பேர் வெளியேறி இருக்கிறார்கள். இதன் காரணமாகவும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தேவையான ஒன்றாக இருக்கிறது” என தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில், “தேர்தல் ஆணையத்தின் இந்த திருத்தப் பணியால் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். பெண்களும், தாழ்த்தப்பட்டோரும் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்’’ என்றும் வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணமாக கருதுங்கள். 11 ஆவணங்களின் பட்டியல் முழுமையானது அல்ல என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறியிருக்கிறார். எனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை பரிசீலியுங்கள்” எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அதுவரை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டனர்.