பாட்னா: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். சுபால் பகுதியில் இன்று நடைபெற்ற யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்தார்.
இந்த யாத்திரையில் ராகுல் காந்தி பேசியதாவது: “பாஜக ஆட்சி 40 முதல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று அமித் ஷா பலமுறை கூறியுள்ளார். அவர்கள் 40-50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்று அவருக்கு எப்படித் தெரியும்? இது ஒரு விசித்திரமான கூற்று.
இன்று, அவர்கள் (பாஜக) வாக்கு திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை நாட்டு மக்களின் முன் வெளிவந்துள்ளது. இது குஜராத்தில் தொடங்கி, பின்னர் 2014-ல் தேசிய மட்டத்திற்கு வந்தது, பின்னர் பிற மாநிலங்களுக்குள்ளும் நுழைந்தது. நான் பொய் சொல்ல மாட்டேன், என்னிடம் உண்மை தரவுகள் இருக்கும்போது மட்டுமே நான் பேசுவேன்.
இந்த போராட்டம் பாஜக தலைமையையும் தேர்தல் ஆணையத்தையும் வாக்குகளைத் திருடுவதற்கு முன் இருமுறை யோசிக்க வைக்கும்” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.