நெல்லூர்: ஆந்திராவில் கார் விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் நாராயணா மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 6 மாணவர்கள், புச்சிரெட்டி பாளையம் பகுதியில் நேற்று காலையில் நடைபெற்ற தங்கள் நண்பனின் தங்கை நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர்.
பிறகு இவர்கள் மீண்டும் கல்லூரி விடுதிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நெல்லூர்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாதிரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் இவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்தது.
இந்த கோர விபத்தில் வீட்டில் இருந்த வெங்கடரமணய்யா (50) என்பவர் அதே உயிரிழந்தார். மாணவர்கள் 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நெல்லூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நெல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.