புதுடெல்லி: சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவையை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் நாளை (ஜூலை 24) தொடங்குகிறது.
இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வருகை தர சுற்றுலா விசாவுக்கு ஜூலை 24 முதல் விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் முறையில் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சீன குடிமக்கள் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா விசா கோரி பீஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய மாநகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் நேரில் சமர்ப்பித்து விசா பெறலாம். 2020-ம் ஆண்டு சுற்றுலா விசா சேவை நிறுத்தப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 2020 முதல் சீன நாட்டவர்களுக்கான சுற்றுலா விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. மேலும், சீன முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான சீன ஆப்கள் தடை செய்யப்பட்டன. கோவிட் பெருந்தொற்றை கருத்தில் கொண்டும், சீன நாட்டினருக்கான விசா சேவை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சுமுக உறவு அதிகரிக்கத் தொடங்கி இருப்பதை அடுத்து, விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில், இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கு திபெத்தில் உள்ள கைலாஷ் மற்றும் மானசரோவர் ஏரிக்கு இந்தியர்கள் செல்வதற்கு தனது எல்லையை சீனா திறந்தது. இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் சீன பயணத்தை அடுத்து இத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.