புதுடெல்லி: கடந்த 2003 முதல் 3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ‘ஓலைச்சுவடி பாரம்பரியத்தின் மூலம் இந்தியாவின் அறிவு மரபை மீட்பது’ என்ற தலைப்பில் முதல் சர்வதேச ஓலைச்சுவடிகள் பாரம்பரிய மாநாடு மத்திய அரசு சார்பில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
கடந்த 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாடு நடைபெற்றது. இதில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார். வரலாற்று சிறப்புமிக்க இந்த உரையின் 132-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
கடந்த 2003 முதல் 3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதுவரை 92 ஓலைச்சுவடி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கூடுதலாக 93 ஓலைச்சுவடி வள மையங்கள் உள்ளன. அவற்றில் 37 செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.