திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 18 அடி நீள ராஜநாகத்தை வனத் துறை பெண் அதிகாரி ஒருவர் லாவகமாக பிடித்து அப்புறப்படுத்தும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பெப்பரா, அஞ்சுமருதுமூட்டின் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் நீரோடை செல்கிறது. இந்த நீரோடைக்கு குளிக்கச் சென்ற அப்பகுதி மக்கள் அதில் நீளமான ராஜநாகம் இருப்பதை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பருத்திப்பள்ளி வனச்சரகத்தை சேர்ந்த பெண் அதிகாரி ஜி.எஸ். ரோஷிணி சம்பவ இடத்துக்கு சென்றார். அவர் ஒரு குச்சியை பயன்படுத்தி அந்தப் பாம்பை பிடித்து ஒரு பையில் அடைத்தார். 18 அடி நீளம் கொண்ட அந்தப் பாம்பை அவர் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மிகவும் விஷம் கொண்டதாக கருதப்படும் ராஜநாகத்தை கவனமாககையாண்டு, அதை பிடித்த ரோஷிணிக்கு பாராட்டுகுவிந்து வருகிறது. ரோஷிணி தனது 8 ஆண்டு கால பணி அனுபவத்தில் இதுவரை 800-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். மிக அரிதான ராஜநாகத்தை பிடித்தது இதுவே முதல்முறை என்று அவர் கூறியுள்ளார்.