ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் கவாரா ராம் கால்பெலியா, இவரது மனைவி ரேகா (55). இவருக்கு ஜடோல் பிளாக்கில் உள்ள சுகாதார மையத்தில் 17-வது குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த டாக்டர் ரோஷன் தராங்கி கூறும்போது, “ரேகாவுக்கு இது 4-வது குழந்தை என்றார். ஆனால், 17-வது குழந்தை என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.
ரேகாவுக்கு குழந்தை பிறந்ததற்கு அவரது மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள், கிராமத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரேகாவுக்கு இது 17-வது குழந்தையாக இருந்தாலும், 4 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 5 குழந்தைகள் பிரசவத்துக்குப் பிறகு இறந்துவிட்டன. தற்போது ரேகாவுக்கு 7 ஆண் குழந்தைகள் 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளன.
இதுகுறித்து கவாரா கூறும்போது, “எனது 2 மகன்கள், 3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. என் மனைவி ஏற்கெனவே பாட்டியாகி விட்டார்” என்றார். பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார் கவாரா. குடும்பத்தில் பணக்கஷ்டம் இருந்தாலும், கடன் வாங்கிதான் பிழைப்பை நடத்துகிறேன்” என்கிறார் கவாரா.