புதுடெல்லி: மாநில அரசுகளின் பொருளாதார செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 16 மாநிலங்களின் வருவாய் உபரியாக உள்ளது. இதற்கு முன்பு பற்றாக்குறை மாநிலங்கள் பட்டியலில் இருந்த உத்தர பிரதேசம் இப்போது உபரி வருவாய் மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் உத்தர பிரதேசத்தின் உபரி வருவாய் ரூ.37 ஆயிரம் கோடியாக இருந்தது.
இந்தப் பட்டியலில் குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கர்நாடகா (ரூ.13,496 கோடி), சத்தீஸ்கர் (ரூ.8,592 கோடி), தெலங்கானா (ரூ.5,944 கோடி), உத்தராகண்ட் (ரூ.5,310 கோடி), கோவா(ரூ. 2,399 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதுபோல, பற்றாக்குறை மாநிலங்கள் பட்டியலில் இருந்த மற்றொரு மாநிலமான மத்திய பிரதேசமும் (ரூ.4,091 கோடி) உபரி வருவாய் மாநில பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும் அருணாச்சல், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களும் உபரி வருவாய் மாநில பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த 16-ல் 10 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே காலகட்டத்தில் (2022-23) வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் பட்டியலில் ஆந்திர பிரதேசம் (-ரூ.43,488 கோடி), தமிழ்நாடு (-ரூ.36,215 கோடி), ராஜஸ்தான் (-ரூ.31,491 கோடி), மேற்கு வங்கம் (-ரூ.27,295 கோடி), பஞ்சாப் (-ரூ.26,045 கோடி), ஹரியானா (-ரூ.17,212 கோடி), அசாம் (-ரூ.12,072 கோடி), பிஹார் (-ரூ.11,288 கோடி), இமாச்சல பிரதேசம் (-ரூ.6,336 கோடி), கேரளா (-ரூ.9,226 கோடி), மகாராஷ்டிரா (-ரூ.1,936 கோடி) மேகாலயா (-ரூ.44 கோடி) ஆகிய 12 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.