புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்பில் முஸ்லிமாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, பல்ராம்பூரை சேர்ந்த ஜுங்கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நெருங்கிய நண்பர் நீத்து நவீன் ரொஹரா(எ) நஸ்ரின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏடிஎஸ் படையினர் 14 பேரை தேடி வருகின்றனர். ஜுங்கூர் பாபாவால் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களிடம் ஏடிஎஸ் படையினர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் ஒரு பிரபல தர்காவுக்கு வெளியே ஜுங்கூர் பாபா, மோதிரங்களை விற்று வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மதம் மாற்றத்துக்கு நிதி அளிக்கும் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் உதவியால் ஜுங்கூர் பாபா, மகாராஷ்டிராவில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிறகு உ.பி.யின் பல்ராம்பூரில் குடியேறி மதம் மாற்றும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். ஜுங்கூர் பாபா வழக்கை விசாரிக்கும் ஏடிஎஸ் படை வட்டாரங்கள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, “நான்காயிரம் பேரை ஜுங்கூர் பாபா குறி வைத்து, 1,500-க்கும் மேற்பட்ட பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றி உள்ளார்.
அவரது உறவினர்கள், நெருங்கியவர்கள் பல இடங்களில் மக்களை இஸ்லாத்தில் சேர ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸம்கரில் சட்டவிரோத மதம் மாற்றம் தொடர்பாக ஜுங்கூர் மற்றும் அவரது உறவினர்கள் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், வழக்குகளில் இருந்து தப்பிக்க காவல் துறை, நிர்வாகம் மற்றும் உளவு அதிகாரிகள் சிலருக்கு அதிக பணம் கொடுத்துள்ளார்” என்று தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஜுங்கூர் பாபா உள்ளிட்டோரை ஏடிஎஸ் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹுசைன் அகமது அன்சாரி முன்பு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களை 7 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.