ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இஷான், கனடா நாட்டில் வசித்து வந்தார். அவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இதனால், அவர் தனது நண்பர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுக்க நினைத்தார். இது தொடர்பாக அழைப்பு விடுத்தார். இந்த பார்ட்டிக்கு தனித்து வருவோர் ரூ.1600, ஜோடியாக வருவோர் ரூ.2800 பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்து, மொயினாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஏற்பாடு செய்திருந்த ‘பார்ட்டி’ க்கு மொத்தம் 59 பேர் வந்திருந்தனர். இதில் 22 பேர் மைனர் ஆவர். இந்த பார்ட்டிக்கு கடந்த 4-ம் தேதி, இளம் பெண்களும் தங்களின் காதலர்களுடன் வந்திருந்தனர். பார்ட்டியும் அன்று மாலை களை கட்டியது.
வெளிநாட்டு மதுபானங்கள், டிஜே என ஆட்டம், பாட்டமாக போய் கொண்டிருந்தபோது, அதே சமூக வலைத்தளம் மூலம் தகவல் அறிந்த போலீஸார் பண்ணை வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது 6 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 6 பேரை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர்.