ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர், அமெரிக்காவில் நேற்று காலை மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டார்.
ஹைதராபாத் பிஎன் நகரைச் சேர்ந்தவர் போலே சந்திரசேகர். இவர் பிடிஎஸ் பட்டப்படிப்பை முடித்து விட்டு, கடந்த 2023-ம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெ ரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் நகரில் குடியேறினார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேற்படிப்பு முடித்த சந்திரசேகர், அங்கு ஒரு நிரந்தர வேலையை தேடிக்கொண்டே, ஒரு காஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர் சந்திரசேகரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலே சந்திரசேகரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது மகன் உயர்ந்த அந்தஸ்தை அடைவான் என்று நம்பிய அந்த பெற்றோர் அப்படியே உறைந்து போயுள்ளனர். அவர்களை நேற்று நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ், பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ சுதீர் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
முதல்வர் ரேவந்த் ரெட்டியும் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்ததோடு, சந்திரசேகரின் உடலை விரைவாக சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.