புதுடெல்லி: பண மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கருக்கு சொந்தமான ரூ.557 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியுள்ளதாவது: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கர் என்பவருக்கு சொந்தமான ரூ.557 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த வழக்கில் முடக்கப்பட்டுள்ள ஒட்டு மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.638 கோடியாக அதிகரித்துள்ளது.
மஹிரா இன்ப்ராடெக் (முன்பு சாய் அய்னா பார்ம்ஸ்) உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்புடைய மற்றும் சோக்கர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு சொந்தமான சொத்துகளும் இதில் அடக்கம். குறிப்பாக, குர்கானில் உள்ள 35 ஏக்கர் நிலம், பல்வேறு செக்டார்களில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை இந்த பணமோசடி வழக்கில் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.
தரம் சிங் சோக்கருக்கு தொடர்புடைய நிறுவனம் வீடுகள் கட்டித் தருவதாக கூறி 3,700 பேரிடமிருந்து ரூ.616 கோடியை வசூலித்துவிட்டு வீடுகளை வழங்காமல் வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளது. மேலும், சோக்கர் போலி ஆவணங்களை தயார் செய்து மக்களிடம் திரட்டிய பணத்தை மோசடி செய்தாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.