புதுடெல்லி: குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி சேதம் அடைந்துள்ளதால், அதில் இருந்து விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்களை பெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இதனால் அதை அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்புவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கவுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் – இந்திய பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.
விமான விபத்துக்கான காரணத்தை அறிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதில் ‘காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர் (சிவிஆர்) மற்றும் பிளைட் டேட்டா ரிக்கார்டர் (எப்டிஆர்) என்ற இரு சாதனங்கள் இருக்கும். சிவிஆர் சாதனத்தின் விமான அறையில் நடைபெற்ற உரையாடல்கள் பதிவாகும்.
எப்டிஆர் சாதனத்தின் விமானம் பறந்த உயரம், வேகம், விமானி இயக்கிய விதம் உட்பட ஏராளமான தகவல்கள் சுமார் 25 மணி நேரத்துக்கு பதிவாகும். இந்த தகவல் பெறப்பட்டால் விமான விபத்துக்கான சரியான காரணம் தெரிந்துவிடும்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வுக்காக டெல்லியில் உள்ள கருப்பு பெட்டி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. ரூ.9 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த நவீன ஆய்வு மையம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் விமானத்தின் கருப்பு பெட்டி சேதம் அடைந்திருப்பதால், அதில் பதிவான தகவல்களை பெற முடியவில்லை.
இதனால் இதை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் ஆய்வு மையத்துக்கு அனுப்புவது பற்றி மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.