புதுடெல்லி: வாரிசினை முடிவு செய்ய 14வது தலாய் லாமாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், தலாய் லாமா மரபு 700 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு மத நடைமுறை என்றும், இது யாருடைய தனிப்பட்ட விருப்பத்துக்கும் உட்பட்டது அல்ல என்றும் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் தெரிவித்தார்.
இதுகுறித்து சூ ஃபீஹோங் வெளியிட்ட அறிக்கையில், ‘திபெத்திய புத்த மதத்தில் தலாய் லாமா மரபு 700 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. 14வது தலாய் லாமா 700 ஆண்டு கால மரபின் ஒரு பகுதியாவார். தலாய் லாமா மரபு தொடர வேண்டுமா அல்லது முடிவடைய வேண்டுமா என்பதை ஒருதலைபட்சமாக யாரும் முடிவு செய்ய முடியாது. தலாய் லாமா மரபு அவரிடமிருந்து தொடங்கவில்லை, அவரிடமும் முடிவடையாது. அந்த முறையை ஒழிக்கவோ அல்லது தொடரவோ அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ இதுபோன்ற மதப் பிரச்சினைகளில் இந்திய அரசாங்கம் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. தலாய் லாமா மரபு தொடர்வது குறித்து புனித தலாய் லாமா வெளியிட்ட கருத்தை நாங்கள் கவனித்தோம். அதே நேரத்தில், இந்திய அரசு மத நம்பிக்கைகள் மற்றும் மத நடைமுறைகள் தொடர்பான விஷயங்களில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவோ பேசவோ இல்லை” எனத் தெரிவித்தார்.
பின்னணி என்ன? – திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். முன்னதாக, தனது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்” என தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு , “அடுத்த தலாய் லாமா யார் என்பதை அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பத்தின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவை பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும் நடைமுறை மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதை தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று கூறியிருந்தார்.
மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜு-வின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.