புதுடெல்லி: தேர்தல் ஆணையம் மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாக புதிய இணையதளத்தை தொடங்கி, அந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏராளமான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். மேலும், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்றும் ராகுல் குற்றம் சாட்டினார். இதற்கு தேர்தல் ஆணையமும் பதில் அளித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வாக்கு திருட்டு என்பது ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை நோக்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். தெளிவான வாக்காளர் பட்டியல் என்பதுதான், நேர்மையான சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யும். தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை எல்லாம் தெளிவாக உள்ளது. தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட வேண்டும்.
மின்னணு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் அதை ஆய்வு செய்ய முடியும். எங்களுடைய இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சாரம் தொடங்குகிறோம். அதற்காக ‘ என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைக்கிறோம். அத்துடன் 96500 03420 என்ற செல்போன் எண்ணையும் வெளியிடுகிறோம். இணையதளத்தில்பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறி, பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும். செல்போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்சாரத்தில் இணையலாம்.
இந்தப் போராட்டம் நமது ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்த இணைய பக்கத்தில் பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, மாநிலம் மற்றும் தொகுதி உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறும்போது, ‘‘தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, ஆதாரங்களை வெளியிடாமல் தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறுகிறது’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.