புதுடெல்லி: “நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது.” என வாக்குத் திருட்டு 2.0 குற்றச்சாட்டை நேற்று முன்வைத்த ராகுல் காந்தி, இன்று அதே கருத்தை வலியுறுத்தி அடுக்கடுக்காக ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு நடப்பதற்கு வாட்ச்மேன் போல் காவல் காத்திருந்ததாக காட்டமான கருத்தை பதிவு செய்துள்ளார்.
நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் ஒரு பகுதியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “காலை 4 மணிக்கு எழுந்திருங்கள், 36 வினாடிகளில் 2 வாக்காளர்களை நீக்குங்கள், பின்னர் மீண்டும் தூங்கச் செல்லுங்கள். வாக்கு திருட்டு இப்படித்தான் நடந்தது.
இந்த சம்பவங்களின்போது தேர்தல் ஆணையம் விழித்திருந்தது, இந்த வாக்கு திருட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தது, திருடர்களைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது. வாக்கு திருடர்களின் பாதுகாவலராக தேர்தல் ஆணையம் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
நடந்தது என்ன? – நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “ ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்களை நீக்கும் முயற்சி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதியாக இருக்கலாம்.
கோதாபாய் என்ற பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி உள்நுழைவு (லாகின்) அடையாள எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருக்கு தெரியாமலேயே 12 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. போலி உள்நுழைவு அடையாள எண், சந்தேகத்துக்குரிய, வெளிமாநில செல்போன் எண்களை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது. அதேபோல, சூர்யகாந்த் என்பவரது பெயரில் இருந்து 14 நிமிடங்களில், 12 வாக்காளர்களை நீக்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நீக்கப்பட்ட வாக்காளர்கள் சூர்யகாந்த், பபிதா சவுத்திரி ஆகியோர் உங்கள் முன்புதான் உள்ளனர்.(அவர்களை மேடையில் அறிமுகம் செய்தார்.)
நாகராஜ் என்பவர் அதிகாலை 4.07 மணிக்கு 2 வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்களை 38 விநாடிகளில் சமர்ப்பித்துள்ளார். தனி நபர்கள் இது போல விண்ணப்பிப்பது சாத்தியம் அல்ல. எனவே, அழைப்பு மையங்களில் (கால் சென்டர்) பயன்படுத்தப்படும் மென்பொருள் மூலமாக இந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல மாநிலங்களில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க ஒரே செல்போன் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, புதிதாக வாக்காளர்களை சேர்க்கவும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ராஜுரா சட்டப்பேரவை தொகுதியில் போலியாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்காளரின் பெயர் ‘YUH UQJJW’ எனவும் அவரது முகவரி ‘sasti, sasti’ என்றும் உள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, பிஹார், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் இதே முறையில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்’ என்று கூறினார்
ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தேர்தல் ஆணையம் மறுப்பு: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவர் கூறுவதுபோல வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு பெயரையும் ஆன்லைனில் நீக்க முடியாது. தவிர, பாதிக்கப்படும் நபரின் கருத்தை அறியாமல் அவரது பெயரை யாரும் நீக்க முடியாது.
2023-ல் கர்நாடகாவின் ஆலந்த் சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்களின் பெயர்களை நீக்க சில முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை தோல்வியில் முடிந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்தால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆலந்த் தொகுதியில் 2018-ல் பாஜகவின் சுபாத் குட்டேதரும், 2023-ல் காங்கிரஸ் கட்சியின் பி.ஆர்.பாட்டீலும் வெற்றி பெற்றனர். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்கு திருட்டுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி கையெழுத்து பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.