புதுடெல்லி: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு இந்த மாதம் தொடக்கத்தில் நடந்தது. அப்போது சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, வரும் அக்டோபர் 30-க்குள் கடைசியாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து பல மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியின் இணைய தளத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் திருத்த பட்டியலை வெளியிட்டுள்ளார். பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்தபின், நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 2026-ம் ஆண்டில் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் பல மாநிலங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை நீக்குவதே, சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.