புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் உரிமையை நிலைநாட்டுவதற்கான யாத்திரையை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான விழாவில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சசாரமில் தொடங்கிய இந்த யாத்திரையின் மூலம் 1,300 கி.மீ தூரம் பயணித்து மக்களிடையே வாக்காளர் திருட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை இந்தியா கூட்டணி முடுக்கி விட உள்ளது.
யாத்திரை தொடக்க விழாவின்போது ராகுல் பேசும்போது, ‘‘இந்த யாத்திரை அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம். நாடு முழுவதிலும் சட்டமன்ற தேர்தல்கள், மக்களவை தேர்தல்கள் திருடப்படுகின்றன.
பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வாக்காளர்களை நீக்குவது மற்றும் சேர்ப்பதன் மூலம் வாக்குகளை திருட ஒரு புதிய சதி செய்யப்பட்டுள்ளது. பிஹாரில் தேர்தல்களை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.ஏழைகளிடம் மிஞ்சியுள்ளது வாக்குரிமை மட்டுமே. அதையும் அவர்கள் பறித்துக்கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.