புதுடெல்லி: அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடுவுக்கு நரேந்திர மோடி பணிவுடன் தலைவணங்குவார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ஜூலை 9-ம் தேதியை காலக்கெடுவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்ணயித்துள்ளதால், அதற்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் நலனே முக்கியம்; காலக்கெடு அல்ல என தெரிவித்திருந்தார். மேலும் அவர், “இரு தரப்பினருக்கும் பயன் அளிக்கக்கூடியதாக, இரு தரப்பினருக்கும் வெற்றியை அளிக்கக்கூடியதாக ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே அது சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தமாகவும் இருக்கும். எங்களின் தேசிய நலன்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதை மனதில் கொண்டே எங்கள் முடிவு இருக்கும். வளர்ந்த நாடுகளுடன் அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.” என்று கூறி இருந்தார்.
பியூஷ் கோயலின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பியூஷ் கோயல் எப்படி வேண்டுமானாலும் மார் தட்டிக் கொள்ளட்டும். நான் சொல்வதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். ட்ரம்பின் வரி காலக்கெடுவுக்கு மோடி பணிவுடன் தலைவணங்குவார்.” என்று கூறியுள்ளார்.