கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது.
திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொது செயலர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தையொட்டி 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி வருகை தருவதற்கு ஒருநாள் முன்னதாக நேற்று இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆனால் மம்தா பானர்ஜியின் இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வங்கமொழி பேசும் ரோஹிங்கியாக்கள் மற்றும் சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி காப்பாற்றுவதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.