புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (மே 5) மீண்டும் விசாரணைக்கு வந்தன.
கடந்த விசாரணையின்போது, வக்பு சொத்துக்களை மே 5 வரை ரத்து செய்ய மாட்டோம் என்றும், மத்திய வக்பு கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு எந்த நியமனங்களையும் செய்ய மாட்டோம் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு உறுதியளித்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த உறுதிமொழியை அளித்தார். மேலும், சரியான விவாதங்களுடன் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை அரசாங்கத்தின் கருத்தை கேட்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் நீதிபதிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
அப்போது, வக்பு சொத்துகளை அடுத்த விசாரணை தேதி வரை தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், மனுக்கள் மீதான முதற்கட்ட பதிலை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து இன்றைய தேதிக்கு (மே 5) வழக்கை ஒத்திவைத்தனர்.
இன்றைய விசாரணையின்போது, “வக்பு விதிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மற்றும் அரசு சொத்துகளில் பரவலான ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதனால் 2013 மற்றும் 2024-க்கு இடையில் வக்பு நிலங்கள் 116% அதிகரித்துள்ளன. முகலாயர் காலத்தில் கூட இப்படி ஓர் அசாதாரண உயர்வு இருக்கவில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
“2013-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்குப் பிறகு, சொத்துகள் பரப்பளவில் 116% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. முகலாய சகாப்தத்துக்கு முன்பே, சுதந்திரத்துக்கு முந்தைய மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய சகாப்தங்களுக்கு முன்பே, இந்தியாவில் உருவாக்கப்பட்ட மொத்த வக்புகளின் நிலம் 18,29,163.896 ஏக்கர் என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2013 க்குப் பிறகு, வெறும் 11 ஆண்டுகளில், வக்பு நிலம் கூடுதலாக 20,92,072.536 ஏக்கர் அதிகரித்துள்ளது. மொத்தம் 39,21,236.459 ஏக்கர் நிலம் வக்பு சொத்துகளாக பட்டியலிடப்பட்டுள்ளன” என்று மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் தனது முதற்கட்ட பதிலில் தெரிவித்தது.
இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. “வக்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தவறான தரவுகளை மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது. தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததற்காக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அதன் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, “இந்த வழக்கு ஆரம்பத்தில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும். நான் வரும் 13-ம் தேதி ஓய்வு பெற இருப்பதால், வழக்கின் அடுத்த விசாரணையை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். இடைக்கால தீர்ப்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை” என்று கூறினார். இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் வரும் 15-ம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.