சாய்பாஸா: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரண்டா வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் அமித் ஹஸ்தா என்ற நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
நக்சல் ஒழிப்பு பணியை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில வனப்பகுதிகளில் நக்சலைட்களை முற்றிலும் ஒழிப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கான தேடுதல் வேட்டையில் மத்தியப் படையினர், மாநில போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டத்தில் உள்ள கேதல் கிராமத்தில் நடைபெறும் கர்மா திருவிழாவில், நக்சலைட் கமாண்டர் சசிகாந்த் கன்ஜு என்பவர் கடந்த 3-ம் தேதிவருவதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நக்சல் தடுப்பு போலீஸார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். போலீஸாரை பார்த்ததும் நக்சல் குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 போலீஸார் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து, நக்சல் கும்பலை வேட்டையாட தீவிர தேடுல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.மேற்கு சிங்பும் மாவட்டத்தின் சரண்டா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டபோது சாய்பாசா என்ற இடத்தில் நக்சல் நடமாட்டம் கண்டறியப்பட்டது. அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ‘திரிதியா சம்மேளன் பிரஷ்துதி குழு (டிஎஸ்பிசி) என்ற நக்சல் அமைப்பின் மண்டல கமாண்டராக செயல்பட்ட அமித் ஹஸ்தா என்ற ஆப்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.