கொல்கத்தா: பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிஹாரில், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்கிறார்.
பிஹாரில் இன்று இறுதியாக நடைபெறும் யாத்திரையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் யூசப் பதான், லலித்தேஷ் திரிபாதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியதாவது:
பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுலுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவராக இருக்க மம்தா விரும்பவில்லை. அதனால் அக்கட்சி சார்பில் மற்றவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க ராகுல் போராடுகிறார். இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறினார்.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் கூறுகையில், ‘‘பிஹார் யாத்திரை நிகழ்ச்சிக்கு யாரை அனுப்புவது என்பது எங்கள் முடிவு. இந்த யாத்திரைக்கு மம்தாவின் ஆதரவு ஏற்கெனவே உள்ளது. அதனால்தான் நாங்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்த 2 தலைவர்களை அனுப்பியுள்ளோம்’’ என்றார்.