புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் பல லட்சம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். “அதிகாலை 4 மணிக்கு 36 வினாடிகளில் 2 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் விழித்திருந்து இதை பார்த்தாலும் திருடர்களை பாதுகாக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தனது தலைமை தோல்வி அடைந்ததை ராகுல் ஏற்க வேண்டியிருந்தது. அவரது தலைமை பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு இட்டுச் சென்றது.
இந்திய இளைஞர்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கத் தொடங்கினர். காங்கிரஸ் கட்சியை தொடர் தோல்விக்கு இட்டுச் சென்ற ராகுல் இந்தியாவின் ஜனநாயக அமைப்பை அவமதிக்கிறார். அவரை இந்த நாடு நம்பாது.
ஏழைகள், விவசாயிகள் மற்றும் சாமானியர்கள் பிரதமர் மோடியை தங்கள் தலைவராக கருதுகின்றனர். தேர்தல் தோல்விகளுக்கு பிறகு ராகுல் காந்தி தனது பலவீனங்களை மறைக்க தேர்தல் அமைப்பை குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தால், அதை யாரும் ஏற்க மாட்டார்கள். நாடு மாறிவிட்டது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா முன்னேறியுள்ளது. இவ்வாறு கிரண் ரஜிஜு கூறினார்.