புதுடெல்லி: ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து,
பாஜகவுக்கு காங்கிரஸ் 3 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: தொலைக்காட்சி விவாதத்தின்போது பாஜகவைச் சேர்ந்த பிந்து மகாதேவ், ராகுல் காந்திக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முதலாவதாக, இது மக்கள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தீட்டப்படும் ஒரு மிகப்பெரிய தீய சதி திட்டமா? இரண்டாவது, மிரட்டல், வன்முறை, கொலை மிரட்டல் வழியான அரசியலை பாஜக ஆதரிக்கிறதா? மூன்றாவது, அரசின் நிர்வாகத்தை விமர்சிக்கும் அரசியலமைப்பு பொறுப்பில் உள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாக்க பாஜக முயல்கிறதா? என்ற 3 கேள்விகளுக்கு விடை காண காங்கிரஸ் விரும்புகிறது.
இந்த கொலை மிரட்டல் சட்டத்தின் ஆட்சியின் மீதும், ஜனநாயகத்தின் பாதுகாப்புக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியலமைப்பின மீதும் நடத்தப்பட்ட நேரடி தாக்குதல். இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.