புதுடெல்லி: ரஷ்யாவின் கலினின்கிரட் பகுதியில் உள்ள யாந்தர் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் தமால் என்ற புதிய போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக போர்க்கப்பல்கள் உள்நாட்டிலும், ரஷ்யாவில் தயாரிக்கப்படுகின்றன.
எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத துஷில் ரக போர்க்கப்பல்களை ரஷ்யாவில் தயாரிக்க, இந்திய பாதுகாப்புத்துறை ஆர்டர் கொடுத்தது. இதில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உட்பட 26 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கப்பல் ரஷ்யாவின் கலினின்கிரட் பகுதியில் உள்ள யாந்தர் கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் இந்த இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய கடற்படையின் மேற்கு மண்டல தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் முன்னிலையில் ஐஎன்எஸ் தமால் கடற்படையில் இணைந்தது. இதில் இந்திய பாதுகாப்புத்துறை, கடற்படை மற்றும் ரஷ்ய கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.
புராஜெக்ட் 1135.6 திட்டத்தின் கீழ், எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட 8 போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஆகும். துஷில் ரக கப்பலில் இது 2-வது கப்பல். முதல் துஷில் ரக கப்பல் ஐஎன்எஸ் துஷில் என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடற்படையில் இணைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 7 போர்க்கப்பல்களும் கடற்படையின் மேற்கு மண்டலத்தில் இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் துஷில் போர்க்கப்பல் கேப்டன் ஸ்ரீதர் டாடா தலைமையில் இயங்கும்.
கடந்த 65 ஆண்டுகளில் இந்திய கடற்படைக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 51-வது போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது இந்திய கடற்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியா – ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பில் மிக முக்கியமானது என இந்நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் ஜஸ்ஜித் தெரிவித்தார்.