புதுடெல்லி: ட்ரோன்கள் மூலம் ரயில் பெட்டி களை சுத்தம் செய்வது குறித்து ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளதாவது: ட்ரோன்கள் மூலம் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சி முதல் முறையாக சோதனை அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் அசாமின் காமக்யா ரயில் நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அங்கு எளிதில் செல்ல முடியாத ரயில் மற்றும் நடைமேடைகளின் பகுதிகளை சுத்தம் செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மிகவும் வலுவான செயல்திறன் மற்றும் துல்லியத்தன்மையுடன் அதன் பணிகள் அமைந்திருந்தன. யாரும் எளிதில் நுழைந்து சுத்தம் செய்ய முடியாத இடங்களை ட்ரோன்கள் எளிதாக அணுகி தூய்மைப்படுத்தி விடுகின்றன.
ரயில்களை சுத்தம் செய்யும் ட்ரோன்களில் உயர் அழுத்த நீர் நாசில்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், பாஜக தலைவர் திலீப் கோஷ், காமக்யா ரயில் நிலையத்தில் ரயில்களை சுத்தம் செய்யும் ட்ரோன்களின் வீடியோவை வெளியிட்டிருந்தரா். அதில், “ஒரு நாட்டின் முன்னேறத்துக்கு நவீன, மேம்பட்ட இயந்திரங்கள் அவசியம்’’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய ரயில்வே, கடந்த சில ஆண்டுகளாக பல வழிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகிறது. ரயில்வே உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான நிகழ்நேர உள்ளீடுகளைப் பெறுவதற்காக 2018-ல் ட்ரோன்களை அறிமுகப்படுத்தியது. 2020-ம் ஆண்டில், ரயில்வே அமைச்சகம் ‘நிஞ்ஜா ஆளில்லா வான்வழி வாகனங்கள்’ ஐ உருவாக்கியது – இது நிகழ்நேர கண்காணிப்பு, வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தானியங்கி பாதுகாப்பு முறை கண்காணிப்பை மேம்படுத்தியது.