பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், யாருடைய தாயையும் அவதூறாகப் பேசக் கூடாது என்றும், அதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து பிஹாரில் நாளை (செப்.4) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் விரக்தி காரணமாக அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாக மத்திய அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பிஹார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், “யாருடைய தாயாரையும் அவதூறாகப் பேசக் கூடாது. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இது நமது கலாச்சாரமல்ல. ஆனால், சோனியா காந்தி குறித்து பிரதமர் மோடி அவதூறாகப் பேசி இருக்கிறார். நிதிஷ் குமாரின் டிஎன்ஏ குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாஜக எம்எல்ஏக்கள் பலர் எனது தாயாரை, சகோதரிகளை சட்டப்பேரவையிலேயே அவதூறாகப் பேசி இருக்கிறார்கள். பாஜக செய்தித்தொடர்பாளர்கள், தொலைக்காட்சி நேரலையிலேயே பெண்களை அவதூறாகப் பேசுகிறார்கள். பிஹார் மக்களுக்கு அனைத்தும் தெரியும். வெளிநாட்டில் பல நாட்கள் இருந்த பிரதமர் மோடி, நாடு திரும்பிய பிறகு அழத்தொடங்கி இருக்கிறார். ஆனால், வெளிநாட்டில் இருந்தபோது சிரித்துக்கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிஹார் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடைபெற்றது. தர்பங்கா நகரில் சமீபத்தில் நடைபெற்ற பேரணியின்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறான கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிஹாரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “பாரம்பரியமிக்க பிஹாரில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்ததை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. பிஹாரில் ஆர்ஜேடி – காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என் தாய் பற்றி அவதூறாக பேசி உள்ளனர்.
அந்த அவதூறு கருத்து என் தாய்க்கு மட்டும் அவமானம் அல்ல. நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவமானம். இதைக் கேட்டு, பார்த்த பிறகு ஒவ்வொரு தாயும் எப்படி மனம் வருந்தி இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அதே வலி பிஹார் மக்களுக்கும் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
உங்களைப் போன்ற கோடிக்கணக்கானவர்களுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக என் தாய் என்னை அவரிடமிருந்து பிரித்தார். என் தாய் இப்போது உயிருடன் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, அவரைப் பற்றி காங்கிரஸ், ஆர்ஜேடி நிகழ்ச்சியில் அவதூறாக பேசி உள்ளனர். சகோதரிகளே, தாய்மார்களே நீங்கள் உணர்ந்த வலியை என்னால் உணர முடிகிறது. இது மிகவும் வேதனையானது. ராயல் குடும்பத்தில் பிறந்த இளவரசரால் ஏழைத்தாயின் வலியை புரிந்துகொள்ள முடியாது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.