ரத்லம்: தண்ணீர் கலந்த டீசலை நிரப்பியதால் ம.பி. முதல்வரின் கான்வாய் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றன. இது தொடர்பாக அந்த பெட்ரோல் நிலையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.
ம.பி. முதல்வர் மோகன் யாதவ் நேற்று ரத்லம் மாவட்டத்தில் பிராந்திய தொழில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்நிலையில் அவரது பயணத்தின் போது உடன் செல்லும் கான்வாயில் இடம்பெறுவதற்காக இந்தூரில் இருந்து 19 கார்கள் புறப்பட்டுச் சென்றன.
செல்லும் வழியில் இந்த கார்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ரத்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் சென்றன. அங்கு டீசல் நிரப்பிய பிறகு நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்றதும் கார்கள் பழுதைடைந்து நின்றது. சில கார்கள் பெட்ரோல் நிலையத்திலேயே பழுதடைந்து நின்றன.
இதையடுத்து டீசலை ஆய்வு செய்த டிரைவர்கள் அதில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து உள்ளூர் துணை தாசில்தார் ஆசிஷ் உபாத்யாய அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்திருந்த நிலையில், மழைநீர் டீசல் டேங்கில் கலந்திருக்கலாம் என பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அவரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பெட்ரோல் நிலையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தலைமறைவான பெட்ரோல் நிலைய உரிமையாளரை தேடி வருகின்றனர்.