பெங்களூரு: கன்னட எழுத்தாளரும் வழக்கறிஞருமான பானு முஸ்தாக்கின் ‘ஹார்ட் லாம்ப்’ நூலுக்கு அண்மையில் சர்வதேச புக்கர் பரிசு கிடைத்தது. இந்த விருதை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்பதால், இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஸ்தாக்கிற்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பானு முஸ்தாக் இந்துக்களின் தசரா விழாவை தொடங்கி வைக்க எதிப்பு தெரிவித்து மைசூருவின் முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி விபு பக்ரூ, நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில், ‘‘அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி, அரசின் நிகழ்ச்சி நிரலை பிறர் தீர்மானிக்க முடியாது.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசின் நிகழ்வில் பங்கேற்கும் உரிமை உள்ளது. பானு முஸ்தாக் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்பதை ஏற்க முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தெரிவித்தனர்.