புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்திய ஆயுதப்படைகள், கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின.
இதில், பஹவல்பூரில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மையம், முரிட்கே பகுதியில் இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பாவின் தளம் ஆகியவையும் அடங்கும். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொஹமது ஆகியவற்றின் முக்கிய நபர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருப்பார்கள் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இந்த தாக்குதலில், சில முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழந்தது, அவர்களுக்கான இறுதிச் சடங்களில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதில் இருந்து தெரிய வந்தது. இந்நிலையில், கொல்லப்பட்டவர்களில் 5 பேர் முக்கிய பயங்கரவாதிகள் என இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (மே 10) உறுதிப்படுத்தியுள்ளனர்.
முடாசர் காதியன்: கொல்லப்பட்டவர்களில் முடாசர் காதியன் என்பவரும் ஒருவர். இவரது இறுதிச் சடங்கில் லெப்டினன்ட் ஜெனரல் உட்பட மூத்த பாகிஸ்தான் ராணுவத் தலைவர்கள் கலந்து கொண்டு, மரியாதை செலுத்தினர். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.
மசூத் அசாரின் இரண்டு மைத்துனர்கள்: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனர் மவுலானா மசூத் அசாரின் இரண்டு மைத்துனர்களும் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் ஹபீஸ் முகமது ஜமீல். இவர், அந்த அமைப்பின் பிரச்சார நடவடிக்கைகளை நிர்வகித்து வந்துள்ளார். மற்றொருவர், 1999 ஐசி-814 விமானக் கடத்தலுக்காக தேடப்படும் முகமது யூசுப் அசார்.
காலித்: இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 4-வது முக்கிய நபர், லஷ்கர் இ தொய்பா தளபதி காலித். பைசலாபாத்தில் நடந்த அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
முகமது ஹசன் கான்: ஐந்தாவது நபர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது ஹசன் கான். இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்த குழுவின் செயல்பாட்டுத் தளபதியின் மகன் என்பதும், ஜம்மு காஷ்மீரில் ஏராளமான தாக்குதல்களை ஒருங்கிணைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.