ஆலப்புழா: கடந்த 21-ம் தேதி காலமான கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (101) உடல் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
ஆலப்புழாவில் அரபிக் கடலில் புதன்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மக்கள் புடைசூழ அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் அருகே குழுமியிருந்த ‘சகாவு’கள் முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் புதன்கிழமை இரவு 9.15 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.
புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடம் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகள் பி.கிருஷ்ணபிள்ளை, டி.வி.தாமஸ், பி.கே.சந்திரமோகன், கே.ஆர்.கவுரி ஆகியோரின் நினைவிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 22 மணி நேர பயணத்துக்கு பிறகு வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் ஆலப்புழா வந்தது. வழிநெடுகிலும் மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். புதன்கிழமை பகல் 12.15 மணி அளவில் பரவூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் புதன்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், தங்களில் ஒருவர் என எண்ணி கேரள மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கம்யூனிஸ்ட் உறுப்பினர் டு கேரளா முதல்வர்: 1940-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த வி.எஸ்.அச்சுதானந்தன், தனது அரசியல் வாழ்க்கையில் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். 1957-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலக உறுப்பினரானார். 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் இவரும் ஒருவர்.
2006-ல் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை (எல்டிஎப்) வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று 2011 வரை கேரள முதல்வராக பணியாற்றினார்.