மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி செப்.13-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களின் மாற்றத்துக்கு இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இத்தகைய திட்டங்களில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகரை இணைக்கும் பைரபி – சாய்ராங் புதிய பாதை ரயில் திட்டமும் ஒன்றாகும். மிசோரம் மாநிலம் மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனும் திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இங்கு கடந்த 2014-ம் ஆண்டு வரை அஸ்ஸாம் எல்லையில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள பைரபிக்கு மட்டுமே ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் சாலை மார்க்கத்தில் செல்ல பெரும் தொகை செலவிடும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து, ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில், ரூ.8,071 கோடியில் 51.38 கிமீ நீளத்தில் ரயில் பாதை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2008-ல் அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து, பிரதான பணிகள் 2014-ல் தொடங்கப்பட்டன. இந்த புதிய ரயில் பாதை, தலைநகர் ஐஸ்வாலை அஸ்ஸாமில் உள்ள சில்சாருடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
நாட்டின் வேறு எந்த ரயில் பாதையும் கொண்டிருக்காத வகையில் 48 சுரங்கங்கள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குராங் ஆற்றின் மீது, 371 மீ நீளமும், 114 மீ உயரமும் கொண்ட நாட்டின் இரண்டாவது உயர்ந்த ரயில் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இது குதுப் மினாரை விட 42 மீ உயரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலமே உலகளவில் முதலாவது உயரமான பாலமாகும்.
இவ்வாறான கட்டுமானங்கள் மூலம் ரயில்வே பொறியியல் வரலாற்றில் சவால் நிறைந்த பணியாக மிசோரம் மாநில ரயில் பாதை மாறியுள்ளது. பைரபியில் தொடங்கி ஹார்டுகி, கவ்னபுய், முகல்காங், சாய்ரங் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோதனை ஓட்டம் முடிந்து அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இம்மாதம் 13-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வடகிழக்கு எல்லையோர ரயில்வே மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி நிலஞ்சன் தேப் கூறியதாவது: ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடிந்தது. இது மிகப்பெரிய சவாலாக இருந்தது. கட்டுமான பொருட்களை அஸ்ஸாம், ஒடிசா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரவேண்டி இருந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மலைகளுக்கிடையே ரயில் பாதை அமைக்கப்படுவதால், அதற்கான ஆயத்த பணிகளுக்கு சுமார் 200 கிமீ-க்கு சாலைகள் அமைக்கப்பட்டன. ரயில்பாதை திட்டத்தால் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார் .
தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ்ச்செல்வன் கூறும்போது, “இந்த ரயில் போக்குவரத்து வசதியால் பயண செலவு குறையும். மிசோரம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை எதிர்காலத்தில் உயரும்.இங்கிருப்பவர்களும் சுற்றுலாவுக்காக அங்கே செல்வதற்கு வாய்ப்பாக அமையும். இந்த புதிய ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
குறைந்த கட்டணம்: புதிய ரயில் பாதை மூலம் ரூ.12 செலவில் ஒன்றரை மணி நேரத்தில் சாய்ரங்கில் இருந்து பைரபிக்குச் செல்ல முடியும். இதுவே சாலை மூலமாக கடக்க 3 மணி நேரமாகும். குறைந்தபட்சம் ரூ.60 செலவாகும். இதுவே டாக்சியில் செல்ல கூடுதல் செலவாகும்.
தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள்: மழை, வெள்ளம், நிலநடுக்கம் ஏற்படும் இடங்கள், மலைகளில் உறுதி தன்மையில்லாத பாறைகளால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா (Geological survey of india) அதிகாரிகள் குழுவினர், ஐஐடி- ரூர்க்கியின் சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் நிபுணர்கள் (Civil constructions experts) ஆகியோர் இந்த திட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை கண்காணித்து தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தனர். ரயில் பாதை வரைபடம் தயாரித்தல், சிக்னல், தகவல் தொடர்பு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.