நிஜாமாபாத்: “2026-ம் ஆண்டு மார்ச் 31-க்குள் மாவோயிசம் மற்றும் நக்சல் சித்தாந்தத்திலிருந்து நாட்டை விடுவிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்தார். மேலும், துப்பாக்கிகளை கைவிட்டு சரணடையுமாறு மாவோயிஸ்டுகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் இன்று (ஜூன் 29) நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சரணடைய விரும்புவோர், வடகிழக்கில் ஆயிரக்கணக்கான நக்சல்கள் செய்தது போல் சரணடைந்து பிரதான நீரோட்டத்தில் இணையலாம். ஆனால் துப்பாக்கிகளை எடுப்பவர்கள் தப்பிக்க மாட்டார்கள். கடந்த 18 மாதங்களில் 1,500-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரணடைந்துள்ளனர். வடகிழக்கில் 10,000-க்கும் மேற்பட்ட முன்னாள் நக்சல்கள் வன்முறையைக் கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.” என்றார்.
மாவோயிஸ்டுகளுடன் உரையாடல் நடத்த வேண்டும் என தெலங்கானா காங்கிரஸ் பரிந்துரைத்தது குறித்து கேள்வி எழுப்பிய அமித்ஷா, “நக்சல் வன்முறையால் இறந்த ஆயிரக்கணக்கான பழங்குடியினரின் குடும்பங்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?. காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களைக் கொன்றவர்களிடம் உரையாடல் நடத்துவதை நியாயப்படுத்துவீர்களா?” என்று கூறினார். மேலும், பொதுமக்களிடம், “நக்சல்களை ஒழிக்க வேண்டுமா இல்லையா?” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் ஆட்சி செய்வதற்கும் நக்சல் சித்தாந்தத்தை ஒழிப்பதற்கும் தான் அதிகாரம் அளித்தார்கள் என்பதை முதல்வர் ரேவந்த் ரெட்டி புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகளுக்கு தெலங்கானாவை ஒரு புகலிடமாக மாற்றக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.