மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், ஷகாபூர் பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாணவிகளின் கழிப்பறையில் ரத்தக் கறை இருந்துள்ளது. இது குறித்து தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். யாரெல்லாம் மாதவிடாய் காலத்தில் இருக்கிறீர்கள் என்று முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு எந்த மாணவியும் பதில் அளிக்கவில்லை. ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 125 மாணவிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெண் ஊழியர் ஒருவர், மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை ஏராளமான பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இறுதியில் பெற்றோர், மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள், 2 நிர்வாகிகள், பெண் ஊழியர் என 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பள்ளி முதல்வர் மற்றும் பள்ளியின் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டனர்.