புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மராத்வாடா பகுதி விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மராத்வாடா பகுதியில் உள்ள 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை பாதிப்பால் 8 பேர் உயிரிழந்தனர். பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின. அங்கு 30,000 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமாயின.
இந்நிலையில் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பயிர் சேதம் பற்றிய செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இங்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவித் தொகையை வழங்க வேண்டும். இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அரசு நிர்வாகத்தினருடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.