புதுடெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வாங் யி பேசினார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வாங் யி சந்திக்கிறார். மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சீன அமைச்சர் வாங் யி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்வார் என எதிர்பாார்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமையாகும். எங்களின் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளிடையே நிலையான கூட்டுறவும், எதிர்கால நல்லுறவும் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.