புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடமை பாதை (கர்தவ்யா பாத்) அருகே கட்டப்பட்டுள்ள புதிய கர்தவ்யா (கடமை) பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்துக்கு மத்திய அமைச்சகங்கள், துறை அலுவலகங்கள் மாறுகின்றன.
டெல்லியில் முக்கிய பகுதியாக விளங்கிய ராஜ் பாத் (ராஜ பாதை) பகுதியின் பெயரை கர்தவ்யா பாத் (கடமை பாதை) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்தது. இப்பகுதி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கர்தவ்யா பாத் அருகே கர்தவ்யா பவன்கள் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் அரசு அலுவலகங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது.
டெல்லி ராய்சினா ஹில்ஸ் பகுதியில் நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் கட்டிடங்களில் கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் பிற துறை அலுவலகங்கள் எல்லாம் கர்தவ்யா பவன்களுக்கு மாற்றப்படுகின்றன. இதற்காக 10 புதிய கர்தவ்யா பவன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1950 முதல் 1970 வரையிலான காலகட்டங்களில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களான சாஸ்திரி பவன், கிரிஷி பவன், உத்யோக் பவன், நிர்மன் பவன் போன்ற கட்டிடங்களில் தற்போது மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடங்கள் அமைப்பு ரீதியில் காலாவதியானவை என்றும் போதுமான வசதிகள் இல்லாதவை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
எனவே, புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கான திட்டங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மேற்கொண்டது. 10 கர்த்தவ்ய பவன்களை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவற்றில் ஓர் அலுவலக கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
கர்தவ்யா பவன் – 3 கட்டிடத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வெளியுறவுத்துறை மற்றும் ஊரக மேம்பாடு, மத்தியப் பணியாளர் நலத்துறை மற்றும் நில வளத்துறை அமைச்சகங்கள் உட்பட பல அமைச்சகங்கள் மாற்றம் செய்யப்படுகின்றன. இன்னும் 2 கட்டிடங்களின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் மத்திய நிதித்துறை அமைச்சகம் நார்த் பிளாக் கட்டிடத்தில் இருந்து மற்றொரு கர்தவ்யா பவனுக்கு மாறவுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகமும் சவுத் பிளாக் கட்டிடத்தில் இருந்து மாற்றம் செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘1.5 லட்சம் சதுர மீட்டரில் 2 தரை தளங்கள், 7 அடுக்குமாடிகளுடன் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கர்தவ்யா பவன்கள் கட்டப்பட்டுள்ளன. 30 சதவீத மின்சார செலவை குறைக்கும் வகையில் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடங்கள், மத்திய அரசு அலுவலகங்களின் பராமரிப்பு செலவை குறைக்கும். பணிச் சூழல் மற்றும் ஊழியர்களின் நலன், சேவை ஆகியவற்றை மேம்படுத்தும். நவீன கட்டிடங்களுக்கு உதாரணமாக திகழும் கர்தவ்யா பவன்களில், ஊழியர்கள் அடையாள அட்டை மூலம் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.