இம்பால்: மணிப்பூரில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் போர் குழு, மக்கள் விடுதலைப் படை, சோஷியலிஸ்ட் புரட்சிகர கட்சி, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என பல பெயர்களில் மணிப்பூரில் தீவிரவாத இயக்கங்கள் செயல்படுகின்றன.
இவர்கள் தங்கள் இயக்கத்தினரை தீவிரவாத செயல்களில் ஈடுபட தூண்டுகின்றனர். இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இறங்கினர். இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அமெரிக்க தயாரிப்பு எம்-16 ரக துப்பாக்கி, 5 இன்சாஸ் ரக துப்பாக்கிகள், சிம் கார்டுகள் மற்றும் 1 ஜீப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.