புதுடெல்லி: ஏகமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை செயலற்றதாக்கும் அதிகாரம் சட்டப்பேரவைக்குத்தான் உள்ளது என்றும் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, சட்டப்பேரவையில் அமைச்சரவையின் ஒப்புதல்படி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை செயலற்றதாக்கும் அதிகாரம் சட்டப்பேரவைக்குத்தான் உள்ளதேயன்றி, ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது.
இதனால் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை.
இந்த விவகாரத்தில் எப்போது தலையிட வேண்டும், எப்போது தலையிடக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்துக்கு நன்றாகத் தெரியும். ஆளுநர்கள், குடியரசுத் தலைவரின் முடிவுகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்ற மத்திய அரசின் வாதம் ஏற்புடையதல்ல.
மசோதாக்கள் மீது இறுதி முடிவு எடுக்கும் நீதிபதியாகவோ அல்லது சூப்பர் முதல்வராகவோ ஆளுநர் செயல்பட முடியாது. நிறைவேற்றப்படும் மசோதா சட்டத்துக்கு முரணானது என்றால் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும். அதுதான் அதிகாரப்பிரிவினை.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதை எதிர்த்து ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி பாிகாரம் தேட முடியாது. எந்த மசோதாக்களையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்திலும் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
அதுபோன்ற திருத்தங்கள் இல்லை என்பதால் தான் உச்ச நீதிமன்றமே தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற காலநிர்ணயத்தை செய்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கால அளவைத்தாண்டி ஆளுநர் கிடப்பில் போட்டடால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதப்பட வேண்டும், என வாதிட்டார்.
அப்போது நீதிபதி விக்ரம்நாத் குறுக்கிட்டு, இந்த விவகாரத்தில் ஆளுநருக்குள்ள மூன்று வாய்ப்புகள் குறித்து உச்ச நீதிமன்றமே ஏன் ஆராயக்கூடாது என்றார். அதற்கு தமிழக அரசு தரப்பில், ‘‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தால் விசாரித்து தீர்ப்பளிக்க ஓராண்டாகிவிடும். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் 3 ஆண்டுகளாகிவிடும்.
இந்த கால அவகாசம் ஆளுநருக்கு வீட்டோ அதிகாரத்தை தரும். இதன்மூலம் உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து பிறப்பித்த உத்தரவால் பலன் இல்லாமல் போய்விடும், என வாதிடப்பட்டது. இதேபோல மேற்குவங்க மாநிலம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராகி, நாட்டின் எதிர்காலத்தை இந்த விவகாரத்தை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்மானிக்க வேண்டும்.
ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை விருப்புரிமையாகக் கொள்ளாமல் பொறுப்புடைமையாகக் கருத வேண்டும். மசோதாவை மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கும் ஆளுநருக்கான அதிகாரம் கட்டற்றது என்றால் அபத்தமாகிவிடும் என வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.