புதுடெல்லி: எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் பாதுகாப்பு சார்ந்த போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் புதன்கிழமை (மே 7) அன்று இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஒத்திகையின்போது, வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்து, மக்கள் தங்களை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றச் செய்ய வேண்டும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக அந்நிய ராணுவ சக்திகளின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சூழல் ஏற்பட்டால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது இந்தப் பாதுகாப்பு ஒத்திகை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மாணவர்கள் மற்றும் மக்களைக் கொண்டு இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையின்போது ஏர் சைரனை ஒலிக்கச் செய்து மக்களை அலர்ட் செய்வது, செடி கொடிகளுக்கு இடையே மறைந்து கொள்வது, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான புதிய மேம்படுத்தப்பட்ட திட்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரிப்பு: கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா படிப்படியாக துண்டித்து வருகிறது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுதல் என தொடர்ந்து இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அவசரமாக கூடியது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினர் பஹல்காமில் நடத்திய தாக்குதல் குறித்து இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி கடும் கண்டனத்தை பதிவு செய்ததாகத் தெரிகிறது. அதேபோல், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் சார்பிலும் புகார் பதிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷ்யா, ஜப்பான் ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார். இதனிடையே, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்ப்பில், ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் விரும்பினால் ரஷ்யா சமரசத்தில் ஈடுபட தயாராக இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நகாடானி டெல்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது நகாடானி கூறும்போது, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலை ஜப்பான் மிக வன்மையாக கண்டிக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஜப்பான் முழு ஆதரவு அளிக்கும்” என்றார்.
பாக். அடுத்தடுத்து ஏவுகணை சோதனை: இந்தியாவுடன் பதற்றம் நிலவும் சூழலில் பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து ஏவுகணை பரிசோதனை நடத்தியது. தரையிலிருந்து பாய்ந்து சென்று 450 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கும் திறன் வாயந்த ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது. இதன் தொடர்ச்சியாக, 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்தது கவனிக்கத்தக்கது.