புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சபாநாயகர் இதை ஏற்க மறுத்ததால் எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் பேச அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இதுகுறித்து தனது கருத்தை சொல்ல முற்பட்டால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
மக்களவையில் பேச எனக்கு உரிமை உள்ளது. ஆனால், ஒருபோதும் நான் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. என்னைப் பேச அனுமதித்தால் விவாதம் நடக்கும். ஆட்சியாளர்கள் ஏதாவது சொன்னால் அதுகுறித்து பேச எதிர்க்கட்சியினருக்கும் அனுமதி தர வேண்டும். ஆனால் அனுமதி தரப்படுவதில்லை. 2 வார்த்தைகள் பேச விரும்புகிறோம். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.