சென்னை: கல்வியாண்டு முடிவடைவதற்கு முன், பேராசிரியரின் மறு நியமன பதவிக்காலத்தை குறைத்த சென்னை பல்கலைகழகத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறை தலைவராக பணியாற்றிய வெங்கடாசலபதி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணி ஓய்வு பெற்றார். பல்கலைக்கழக சட்டப்படி, கல்வியாண்டு முடிவடையும் ஜூன் 30 ஆம் தேதி வரை பணியாற்ற அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், துறைக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை பணி நீட்டிப்பு வழங்கக் கோரி அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால் வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வெங்கடாசலபதியின் கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதனால், கல்வியாண்டு முடிவடைவதற்கு ஒரு மாதம் முன், அவரது பதவிக்காலத்தை குறைத்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு, பல்கலைக்கழக சட்டத்தை சுட்டிக்காட்டி, கல்வியாண்டு ஜூன் மாதம் தான் முடிவடைகிறது என்பதால், வெங்கடாசலபதியின் மறு நியமன காலத்தை ஒரு மாதம் குறைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஒரு மாத ஊதியத்தை வழங்க உத்தரவிட்டது