பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் டோமி வர்கீஸ் (56). இவரது மனைவி ஷைனி (51). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ‘ஏ அண்ட் ஏ சிட் ஃபண்ட்ஸ்’ என்ற சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். ஆரம்பத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான சீட்டுகளை நடத்தி, அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றனர்.
திடீரென ‘‘எனது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆதலால் ஒரு வாரத்துக்கு கேரளாவுக்கு செல்கிறேன்’’ என முதலீட்டாளர்களிடம் கூறிவிட்டு, டோமி வர்கீஸ் குடும்பத்தினருடன் தலைமறைவானார்.
முதலீட்டாளர்களால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. 500-க்கும் மேற்பட்டோர் ரூ.100 கோடி வரை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 275 பேர் வர்கீஸ், ஷைனி ஆகியோர் மீது ராமமூர்த்தி நகர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.