பாட்னா: பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று உறுதி செய்தனர்.
சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல். இது குறித்த விசாரணை உரிய முறையில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேசம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ளவர்களின் பிறப்பிடத்தை வைத்து அந்த மக்களை அடையாளம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அங்கு நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணி அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கியது. ஜூலை 25-ம் தேதிக்குள் திருத்தப் பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புதிய நடைமுறையின்படி 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்று, பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய் மல்யா பாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். இந்த வழக்கில் கடந்த 10-ம் தேதி விசாரணை தொடங்கியது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கர் நாராயண், கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் துவிவேதி, மணீந்தர் சிங் ஆகியோரும் ஆஜராகினர்.
இருதரப்பினரும் சுமார் 3 மணி நேரம் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதன்பிறகு நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய் மல்யா பாக்சி கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள அரசியலமைப்பு சட்டம் அனுமதி வழங்குகிறது. இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்வது ஏன்? முன்கூட்டியே திருத்தப் பணியை மேற்கொண்டு இருக்கலாமே?
தற்போது எந்த அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை ஒரு வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு மனுதாரர்கள் தங்களது பதில் மனுக்களை ஜூலை 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இப்போதைய சூழலில் சிறப்பு திருத்தப் பணிக்கு மனுதாரர்கள் தரப்பில் இடைக்கால தடை கோரப்படவில்லை. பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். அந்த மாநிலத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக ஜூலை 28-ம் தேதி வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.