புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை தனியாக வெளியிட அவசியமில்லை. இதை வலியுறுத்தும் வகையில் எந்த சட்டவிதியும் கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அண்மையில் நடைபெற்றது. கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 7.24 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் ஏடிஆர் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. அவர்களின் பெயர்கள் அடங்கிய தனி பட்டியலை வெளியிட வேண்டும்’’ என்று கோரப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை தனியாக வெளியிட அவசியமில்லை. இதை வலியுறுத்தும் வகையில் எந்த சட்டவிதியும் கிடையாது வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், தேவையான ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். உரிய விசாரணை, முறையான நோட்டீஸ் வழங்கப்படாமல் யாருடைய பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. பெயர் நீக்கப்பட்ட அனைவருக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் தரப்பில் 2.5 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பிஹார் அரசு அலுவலர்கள் ஆவர். பிஹார் வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளை அவர்கள் செய்து கொடுத்து வருகின்றனர். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பாக நாளிதழ்களில் 246-க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதோடு சமூக வலைதளங்கள் வாயிலாகவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 12-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.