புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் இதுவரை (இன்று காலை 9 மணி வரை) ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் 1,60,813 வாக்குச்சாவடி நிலையிலான முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பட்டியலில் திருத்தம் ஏதும் தேவைப்படின் அது குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும், இன்று (ஆகஸ்ட் 6 காலை 9 மணி) வரை எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. உரிமை கோரல் தொடர்பான எவ்வித மனுவும் பெறப்படவில்லை.
அதேநேரத்தில், வரைவு வாக்களார் பட்டியல் தொடர்பாக தகுதி உள்ள வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவது தொடர்பாக வாக்காளர்களிடம் இருந்து நேரடியாக 3,659 உரிமை கோரல் அல்லது ஆட்சேப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கக் கோரி 19,186 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆணையின்படி முறையான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட பிறகு வாய்மொழி உத்தரவு மூலம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள் பட்டியலிலிருந்து எந்தவொரு வாக்காளர் பெயரும் நீக்கப்படவில்லை” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.