புதுடெல்லி: பிஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது குல்குலியா சைத்பூர் கிராமம். இங்குள்ள இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை துவங்கும் முன்பு வரை வெளி ஆட்கள் பலரும் இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்து சென்றபடி இருந்துள்ளனர். இவர்களைப் பற்றி விசாரித்த கிராமத்தினர் அவர்கள் போதை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
எனவே, கிராமத்தில் நுழைவதற்காக இருக்கும் ஒரே ஒரு சாலையில் மூங்கில் தடுப்பை போட்டு மூடி வைத்துள்ளனர். இத்துடன் அங்கு இரவு பகல் என 24 மணி நேரமும் 2-க்கும் மேற்பட்டவர்கள் காவல் பணியில் உள்ளனர். கிராமத்தை கடந்து செல்லும் வாகனங்கள் குறித்து விசாரித்து அவர்களின் விவரங்கள் ஒரு பதிவேட்டிலும் எழுதி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து குல்குலியா சைத்பூர் கிராமவாசியான சத்யேந்தர் மண்டல் கூறும்போது, “பிரவுண் சுகர் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள்கள் பயன்பாடு குறித்த அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, இதற்காக 15 முதல் 28 வயது கொண்டவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள்.
வெளியிலிருந்து இருசக்கர வாகனங்களில் வரும் அடையாளம் தெரியாத வெளிநபர்கள் இவர்களிடையே போதையை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காவல் நிலையத்தை நம்பி பலனில்லை. இதனால், கிராமத்தினரே முன்வந்து இப்பணியில் இறங்கி விட்டோம்” என்றார்.
சுமார் 8,000 மக்கள் தொகை கொண்ட குல்குலியா சைத்பூர் கிராமத்தினருக்காக 3 கி.மீ. தொலைவில் காவல் நிலையம் உள்ளது. இந்த கிராமத்திலும் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கம் பரவி உள்ளது. இதற்கு நடுத்தர வயது கொண்ட ஐந்து பேர் சமீப மாதங்களில் உயிரிழந்துள்ளனர்.
வேறு வழியின்றி குல்குலியா சைத்பூர்வாசிகள் இந்த வித்தியாசமான முயற்சியை செய்து வருகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் பாகல்பூர் மாவட்டத்தின் இதர சில கிராமத்தினரும் இதுபோல் காவல் பணி செய்ய யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.